Saturday, March 28, 2009

சுகந்தி சுப்ரமணியன்: பெண்மையின் வழித்தடம்; பெண்ணுடலின் ஆரம்பச் சொல்







தற்காலப் பெண்ணுடல் ஆவணப்போக்கின் ஆரம்பச் சொல்; சுகந்தி சுப்ரமணியனுடையது. இவரது இருப்பு உறுதியாகின்ற வரை தமிழ்க்கவிதையின் போக்கு ஆண்சார்பு நிலைப்பாட்டையே
கருப்பொருளாகக் கொண்டிருந்தது என்பதை தனியே நான் இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தேவை இல்லை. கவிதையின் ஆன்மா உடலற்றது. ஆண் பெண் என்ற பால்பேதம் அதற்கு ஸ்தூல
அளவில் இல்லையென்றாலும் பெளதீக அளவில் அது உடல் என்பதை அடையாளப்படுத்துகிறது.
ஒருவிதத்தில் சொல்லிப் பார்த்தால் புறச்சூழல் என்பதன் அடையாளமாக வருகின்ற பொருட்கள் ஆணுக்கும் பெண்னுக்கும் வெவ்வேறானதாகவே உள்ளன. ஆண் மையப்பட்ட வஸ்துகளில்
பெண்மையின் இருப்பென்பது இருள் தன்மையடைந்துவிடுகிறது. ஆணின் உலகை எடுத்து மொழியும் ஒரு வஸ்து, அதில் பெண்மையை உள்ளடக்கிக் கொள்ளமுடியாத நிலையில்
அதிகாரம் செலுத்துகிறது. அந்தப் பொருளின் அதிகாரம் ஆணின் மைய அதிகாரத்தின் அடையாள அரசியல் மூலம் மெளனமான வடிவில் நுண் அரசியல் நிகழ்த்த வைக்கிறது.
ஒரு மொழியின் இருதலைப்பட்சமான நிலைப்பாட்டினை இங்கேதான் நாம் புரிந்து கொள்கிறோம்.
இந்த இருதலைப்பட்ச நிலைப்பாடு புறவடிவில் தொடங்கி குடும்பமாக கட்டமையும்போது ஆணின் அதிகார நிறுவனமாக அது வடிவமடைந்துவிடுகிறது. குடும்ப மையத்திற்குள் ஆணின்
இருப்பு பெண்ணின் மீதான பாலியல் அதிகாரமாக மடைமாற்றம் அடைகிறது. இப்பொழுது பெண்ணிருப்பு என்பது இன்மையை எய்துகிறது. ஆவேதான்
“பாலியல் உறவுகளில் உள்ள அதிகாரத்திற்குள் செல்லாமல்,பாலின சமத்துவமின்மையைப் பற்றி விவாதிக்க முடியாது” என்பதனை அமர்த்யா சென் தன் நிலைப்பாடாகவே முன்வைக்கப்படுகிறது.
“அதிகாரம் எனப்படுவது பாலியலில் மையமானதாக இருக்கிறது. பாலினச் சமத்துவமின்மையில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் அதிகாரத்தின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது.
தனது திறன்களை வளர்த்துக் கொள்வதில் சந்தர்ப்பத்தைப் பெறுவது, சுயமரியாதை மற்றும் மற்றவரின் மரியாதையினைச் சாதித்தெடுப்பது என்பதிலெல்லாம் பெண்களை விடவும் ஆண்களுக்கு
சாத்தியப்பாடுகள் மிகுந்திருக்கக் காரணம், இந்தப் பாலின உறவுநிலையிலுள்ள அதிகாரமே. ஆகவே பெண்ணின் அரசியல், அதிகாரம் என்பதெல்லாம் சமூக அடுக்குகளில் நிகழும் போதுதான்
சமூகமாற்றம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி போன்றவை உந்துதல் கொள்ளும்” என்று ழீன் ட்ரெஸுடன் அமர்த்யா சென் சேர்ந்தெழுதியுள்ள Indian: Economic Development and Social
Opportunity என்ற நூலில் வற்புறுத்துகிறார்.
பாலியல் சுதந்திரமான பெண்ணுடல் என்பது ஒற்றைக் கோணத்திலான பாலியல் மீட்பிலிருந்து துலங்குகிறது. ஆதிக்கத்தின் மையமாக உள்ள அகமணமுறையை உடைப்பதில்
துவங்கி ஆண் மொழியிலான கருத்தாடல்களை மீட்டுருவாக்கம் செய்வதில் பிரதானம் கொள்கிறது. ஆக, வரலாறு, இலக்கியம்,தத்துவம்,கலாச்சாரம் என்பதில் எல்லாம் பெண்பால்
தன்மையை இட்டு நிரப்பமுற்படுகிறது.
“எப்பொழுதும் அவளுக்குள்ளே இருக்கிறது; குறைந்தது அந்த நல்ல தாயின் கொஞ்சநஞ்சப் பாலாவது உள்ளே ஊறிக் கொண்டுதான் இருக்கிறது. அவள் தன் அந்த வெள்ளை
நிறப்பாலால் எழுதுகிறாள்” என்ற ஹெலன் சீக்சூவின் பிரகடணம் இதுவரையிலுள்ள பிரதிகளனைத்திலும் தாய்ப்பால்வாசனையினை கமழவிடுகிறது. இதன்மூலம் மொழியின் புழக்கத்தில்
பெண்சார்பு சாத்தியமடைகிறது.இங்கே பாலினமற்றது மொழி என்ற பழங்கருத்தாடல் தன் போதாமையை நிரூபணம் செய்து கொண்டுவிட்டது.
இந்தமாதிரியான கருத்தாடல்கள் எதுவும் ஒலிக்காத ஒரு காலச்சூழலில் பெண் என்ற குறிப்பான்களோடு 1988ஆம் ஆண்டுவாக்கில் ‘புதையுண்ட வாழ்க்கை’எனும் தொகுதியின்
வழியே தனது கவிதைகளை முன்வைத்தார் சுகந்தி சுப்ரமணியன்.
அதுவரை தமிழ்க் கவிதைப் பரப்பில் பதிவுறாத பெண் வஸ்துகளின் சொற்கள் இவரால் அத்தியாவசியமான வஸ்துவாக நிறுவப்பட்டது. இந்திய சமூகத்தில் பெண்ணின் பிரதிநிதித்துவமாக வைக்கப்
பட்ட வஸ்துகளைக் கையாண்டு அதன் எதிர்வலிமையைத் தன் கவிதையினூடே சொல்ல முற்பட்டார் சுகந்தி. அன்றாட குடும்ப புறச்சூழலில் எதிர்ப்படும் பெண்மையின் இடர்ப்பாட்டினை
பேசத் தொடங்கிய சுகந்தி, குடும்ப அமைப்பிற்கு வேறான ஒரு ’வெளி’யை பெண்ணுலக உட்டோபியாவாக(Utopia) உருவாக்கினார்.அதை தன் Hypothesis சாரமாகவே பதியவைக்கத்
தொடங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
வாழ்க்கையைத் தாண்டிய ஒரு வாழ்க்கை. மனதைத் தாண்டிய ஒரு மனம். சமூகத்தைத் தாண்டிய ஒரு சமூகம். ஆணைத் தாண்டிய ஒரு ஆண். மரணத்தைத் தாண்டிய ஒரு அமரத்துவம். அன்பைத்
தாண்டிய ஒரு அசலான காதல். துக்கத்தைத் தாண்டிய ஒரு இன்பம். உறக்கத்தைத் தாண்டிய ஒரு உறக்கம். நிலத்தைத் தாண்டிய ஒரு பிரயாணம். மறதியைத் தாண்டிய ஒரு விழிப்பு.
அழுகையைத் தாண்டிய ஒரு சுகம். நிம்மதியைத் தாண்டிய ஒரு மெளனம். உறவைத் தாண்டிய ஒரு ஸ்நேகம். உரிமையைத் தாண்டிய ஒரு சுதந்திரம். அழகைத் தாண்டிய ஒரு சிலாகிப்பு.
இரைச்சலைத் தாண்டிய ஒரு அமைதி.திசையைத் தாண்டிய ஒரு பறத்தல். இப்படி சமூகத்தால் வழங்கப்பட்ட வரம்புகளை ஒட்டி தாண்ட முடியால் ஏக்கம் கொள்கிறது சுகந்தியின் கவிதை உலகம்.
சுகந்தி அடிக்கடி பயன்படுத்தும்
மீன்,கதவு,பகல், ஒளி,நதி, வானம்,பறவை,சூரியன், ரயில்,மரம்,வெளிச்சம் என்ற படிமங்கள் எல்லாம் கட்டுப்படலுக்கு அப்பாற்பட்டவை.இயற்கையின் உபாசனையாக சுழலும் இப்படிமங்கள்
சுதந்திரத்தினை ரட்சிப்பவை.இதற்கு ஒத்து வீடு,நாற்காலி,சுவர்,கடிகாரம், நாள்காட்டி என்று வரும் பொருட்கள் எல்லைகளை விதிப்பவை.இந்த எல்லைகளை விதிக்கும் வஸ்துகளை கைக்கொண்டு
ஒருவிதத்தில் தன் எல்லையின் பரப்பை கேள்விக்குள்ளாக்குகிறார் சுகந்தி.

‘இரவலும்,கடனும் யாசகமல்ல; /சந்தோஷ உறவுகளின்/ஒரு திசை கூட’என்று சந்தோஷத்திற்கு புதுப் பொருள் சொல்கிற சுகந்தி,
‘முரண்பாடுகளே வாழ்க்கை என்றான பின்/எது சரி?/எதுதான் தவறு?’ என்று சராசரி தன்மைக்குள் வழுவி விழுந்துவிடுகிறார்.
ஒரு மட்டத்தில் உற்சாகத்தின் பாடலாக ஒலிக்கும் தொனியை தன் கவிதையில் கேட்டுக் கேட்டு சலித்த பின் அவருக்கே தெம்பு குன்றிவிடுகிறது. உடனே தெம்பின்மையின் பாடலாக
உருமாறுகிறது இவரின் Hypothesis.
முழுவிதமான நோக்கில் கவனித்தால் கவிதையிலும் நடப்பிலும் சுகந்திக்கு வாழ்க்கை ஒன்றுபோலதான்.கவிதை தனி வசிப்பிடமல்ல; அதுதான் இருப்பிடம் அவருக்கு.ஆகவே
வாழ்வின் குறை கவிதையிலும் குறையாகிறது. குடும்பத்தின் அசதி கவிதையிலும் அசதிதான்.இதனால்தான் இவர் கவிதைக்கென்று தனிக்குடித்தனம் செய்ய முடிவதில்லை.
அழுகுகின்ற வாழ்வை எண்ணி கவிதையில் உணர்ச்சி கொப்புளிப்பதில்லை.அதன்போக்கில் அழுகலின் வாடை அப்படியே வந்துவிழுகிறது.எனவே எல்லா கவிதையிலும்
இடைவிடாது சமர் என்பது சுகந்தியிடம் பூடகமாக வலுப்பெற்றுக்கொண்டேயுள்ளது.
யாருக்கோ பதிலளிக்கும் பொருட்டு பேசப்படும் வரிகள் யாருக்கானதுமல்ல;தனக்குத்தானே பேசிப் பேசி ஓய்வுறும் தன்மையே சுகந்தியின் மையப் பொருளாக பதிவுறுகிறது.
இந்த வரிகள் யாருக்குமான புகாருரைகள் அல்ல.அவருக்கான பேச்சுகளை அவரே அவருக்குள் முணங்கிக்கொள்கிறார். அப்படித்தான் கணிக்க முடிகிறது ஒட்டுமொத்த கவிதைகளையும் வாசிக்கும் போது.

ஒரு கவிதை:‘யாரைப் பற்றியும் பேச எனக்கு உரிமையில்லை/ஆனால் என்னைக் குறித்துப் பேச எல்லோருக்கும்/உரிமையிருப்பதாக அவன் சொன்னான்/யார்?எப்போது? ஏன்?’ இப்படி
பேசுகிறது.
அந்த அவன் என்ற சொல் ஆணாதிக்க உரிமையை பறைசாற்றுகிறது.அதைத்தான் சுகந்தி நாசூக்காக்க,வலிமை குன்றாமல் எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.காலம் காலமாக வரும் அந்த ‘அவன்’யார்?
எல்லாவற்றிற்கும் உரிமை வழங்கும் பணியை அவனுக்கு யார் கொடுத்தது? அந்த அவன் எப்படி அவளை விட மேலானவனாக கருதப்பட்டான்.அந்தச் சாவியை தன் பொறுப்பில் மட்டுமே
வைத்திருக்கும் அவசியம் அவனுக்கு ஏன் நேர்ந்தது? இவ்வாறு நீண்டு போகும் வாதத்தை உணர்ச்சி மட்டத்தில் மட்டுமே எழுப்பாமல் கலாச்சார மட்டத்தில் நின்று ஒலிக்கின்ற பலத்தினை
சுகந்தி, கவிதையில் அநாயாசமாக நகர்த்திச் செல்கிறார்.
சுகந்தியினால் கவிதையில் எதைக்குறித்தும் சரளமாகப் பேச முடிகிறது.முதலில் கவிஞனுக்கு இது ஒரு பாக்கியம். அது கவிதையாகாது போகலாம்.கணிப்பில் பிசகு நேரலாம். அது முக்கியமல்ல;
எதன் பொருட்டும் நினைத்ததும் வார்த்தை வந்துவிழவேண்டும். வா என்றால் வரிகள் அடுக்கி நிற்கவேண்டும். அப்படி சொன்ன சொல் கேட்கும் கவிதை என்பது வலியல்ல;.பிரசவம்.இந்தப் பிரசவம்
சுகந்திக்கு நினைத்ததும் நேர்கிறது.அடுப்பங்கரையில் அன்றாட காட்சிகளைக்கூட வலை பிண்ணுவதைப்போல வார்த்தைகளை வைத்து கவிதையாகப் பிண்ணிக்கொண்டே போகிறார்.
ஆக கவிதையில் பிரக்ஞை என்ற மட்டத்திற்கே திரும்ப முடியாமல் போகிறது அவரால். வந்தது நின்றது மேனிக்கு பல கவிதைகள் வல்லமைகொள்ளாது தவிக்கின்றன.
அந்தக் கோணத்தில் பலரால் எடுத்தாளப்பட்ட கவிதைகளைத் தாண்டி ஒரு கவிதையினை அடையாளம் காண்பது இயலாமல் போகிறது. அப்படி இங்கே பலராலும் எடுத்துப் பேசப்பட்ட கவிதை ஒன்று:
‘எங்களூர் நதி/ எங்கே போய்க்கொண்டிருக்கிறது?தெரியாது/ கல்யாணமானபின்/ ஆறு எதுவரை போகிறது/காட்டுங்கள் என்றேன்/ஐம்பது மையில் தள்ளிப்போய்/ஓர் அணையைக் காட்டினார்/
இதுவரைக்கும்தான்/ எனக்கும் தெரியுமென்றார்/ஆனாலும் ஆறு போய்க்கொண்டிருந்தது.’ எப்படி இருக்கிறது கவிதை?ஆறு போய்க்கொண்டுதான் இருக்கும் வாழ்க்கையைப்போல. யார் தடுத்தும் அது ஓய்வதில்லை.
இக்விதையில் பேசப்படும் கருத்தென்ன.
ஊரில் காலம்காலமாய் ஊர்ந்து செல்லும் ஆறு, விரவிக்கிடக்கும் வயல், நெளிந்து ஓடும் ஓடை இதெல்லாம் பெண்ணின் புரிதலுக்கு அப்பாற்பட்டவையாக நம் சமூகம்
கட்டமைத்திருக்கிறது என்பது.
ஆண் சமூக மொழியில் ஊரின் வரைபடம் பெண்ணுக்குத் தேவையற்ற ஒன்று. நிலத்தின் பதம், அரசியலின் விதம் எல்லாம் பெண் என்பவள் இருப்பற்று அழிக்கப்படுகிறாள். நதியைப் படிப்பது என்பது
நாகரிகத்தைப் படிப்பது. நதியின் வழியே நாகரிகம் என்பது பெண்ணுக்கு புலப்பட்டுவிட்டால் ஆணின் அதிகாரம் நசிந்துவிடும், தகர்ந்துவிடும்.ஆகவே ஆற்றைக் கடக்காத அறிவை பெண்ணிற்கு வழங்கியது
ஆண் மையப்பட்ட சமூகம் என்பதையெல்லம் இக்கவிதை நதியைப் போல ஓடி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இல்லையா?
அடுத்த கவிதையொன்று:
‘இன்னும் தஞ்சை வரை கூடப் போகவில்லை/ஹைதராபாத்தின் அனல் காற்று தெரியும்/ஊட்டியின் பனிக்காற்றைக் கூட/இன்னும் உணரவில்லை/எங்களூர் நொய்யல் நதி தெரியும்/
இன்னும் எனக்கு கங்கைகூட தெரியாது.”என ஏங்கும் சுகந்திக்கு கடைசியில் சொல்ல முடிவது எல்லாவற்றிற்கும் ‘‘ஆமென் ஆண்களே”தான்.
பொதுவாக பயணம் அல்லது கடத்தல் சுகந்தியை சதா வருத்தமடையச் செய்யும் காரியம். ‘மரங்களைத் தேடிப்போவதற்கு’ஆசை. ஆனால் ‘வாகனம் ஏற வேண்டிய தூரங்கள்’ அழுத்துகின்றன.
உடனே‘என்னைக் கொன்று இந்த மண்ணில் புதைத்தாயிற்று ஏற்கெனவே.’என்கிறார்.
சுகந்தி அலைந்து அலைந்து யாசிப்பது ஒன்றே ஒன்றுதான்:அது நிம்மதி. அது கிடைத்த பின் ‘வாழ்க்கையவிட முக்கியமானது வேறு ஒன்றும் இல்லை’ என்று கீழே இறங்கிவிடுவார்.
சுகந்திக்கு என்னதான் பிரச்சனை. அவர்தான் பிரச்சனை. அவருக்கு பிறரின் உறுத்தலைவிட ‘என்னை நான் உறுத்தாதவரை’தான் முக்கியம்.
தடையற்ற வாழ்வினை யாசிக்கும் போதே ‘தாழற்றுத் திண்டாடும் மனக்கதவு’ அவரை உறுத்த ஆரம்பித்துவிடுகிறது.
‘மனித நடமாட்டமில்லாத இடங்கள் அபூர்வமானவை;அழகானவை கூட’ அது வேண்டும் சுகந்திக்கு. அங்கே சென்றுவிட்டால் ‘எனக்கே பிடிக்கவில்லை./
எனது-நான்’ என்கிற அலுப்புக் கவ்வுகிறது. உடனே ‘சிறகுகள் இழந்த பறவையாய்/வானத்தில் மிதக்கிறது உயிர்’என உயிர்ப்புக் கொள்ளும்
சகந்தி, ‘கண்கள் தூக்கம் மறந்ததற்காய்’ வருத்தமுறுகிறார். தூக்கத்தினைப் பிடிக்கமுடியாத தோல்வி தாளாமல் ‘நான் இன்னும் விழித்திருக்கிறேன்/
எனதுறக்கத்தில்’என்று சமாதானம் அடைகிறார்.மறுபடி வேறு ஒரு இடத்தில் ‘சிலர் மாத்திரையில்/இன்னும் சிலர் சாராயத்தில்/எல்லோரும் உறங்க/நடுநிசியில் நான்/தேடிக்கொண்டிருக்கிறேன்/
உறக்கத்தை’என விம்முகிறார்.
எல்லோருக்கும் தனித் தனி உலகம். தனித் தனி நிறங்கள். தனித் தனிக் காட்சி. இதுதான் சுகந்தியின் கவி விருப்பு.ஒருவிதத்தில் அவரின் கவிதைக் கோரிக்கை.
‘உப்பு மிளகு சேர்த்து/என் உடலை நானே ருசிக்கிறேன்/சொல்லத் தெரியாத பறவை/தன் சந்தோஷத்தை/பறந்து பறந்து நிரப்புகிறது வெளியில்/எல்லோர்க்குமான உலகம்/தினசரி நிகழ்கிறது/
நாமதைக் காண்பதில்லை.’ஆம். எல்லோருக்குமான உலகை எப்படி காண்பது. அதன் உதயம் காணாமலே மறைவை எட்டுகிறதே எப்படி? இவையெல்லம் சுகந்திக்குள் எழும் வினாக்கள்.
வினாக்கள் எல்லவற்றிற்கும் பதில் தெரியவேண்டுமா என்ன? வேண்டாம் என்றாலும் விடுவதாய் இல்லை அவர் மனம். சதா நச்சரிக்கிறது. கிடந்து இம்சிக்கிறது.
இப்படி நோய்க் கூறுகளினூடே வாழ்ந்து அவதியுற்ற ஒரு பெண்ணின் அவதிகளுக்கு இந்த ஆண்வயப்பட்ட உலகம்தான் காரணம். அதன் நிரூபணம்தான் இப்பிரதிகள் நமக்கு வழங்குகின்றன.
ஆண்வயப்பட்ட உலகம் என்பதை படைப்பாளியின் குடும்பம் என்ற சிறு பரப்போடு குறுக்கிப் பார்க்கவேண்டாம் என்பது நான் இன்கே அழுத்தம் தர விரும்புவது.

சுகந்தியின் கவிதைகளில் குடும்பச் சித்திரம் என்பது பிரதான அங்கம் வகிக்கிறது.அது ஒன்றே அவரின் உலகம். அவர் மீற விரும்பிய உலகம்.
குடும்பத்தில் நிகழும் தினசரி வேடிக்கைகள், சங்கடங்கள் வந்துவந்து ஆக்கிரமிக்கின்றன அவரது கவிதைகளில்.அதுவே சுகந்தியின் தனித்த அடயாளமாக தென்படுகிறது.
அதற்காகவே அவர் முக்கியத்துவம் பெற்றார்.பெண்பால் அரசியல் தீவிரம் கொண்ட 90களுக்கு அப்பால் சுகந்தியின் படைப்புக்களை விசாலமான
முறையில் பெண்கவிஞர்கள் எல்லோரும் சேர்ந்து கவனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஏனோ மெளனமே நிலவியிருக்கிறது. அவரது தொகுப்பில் ஆண் பாடைப்பாளிகளின் முன்னுரை,மதிப்புரைகளே வலிமை சேர்க்கின்றன.
தனது ‘மீண்டெழுதலின் ரகசியம்’ தொகுப்பில் கூட சுகந்தி நன்றி நவிலும் பகுதியில் நினைவில் நிற்கும் முகங்களுக்கு நன்றி என குறிப்பிடும் அதிகப்படியான பெயர்கள் எல்லாமே
ஆண் படைப்பாளிகளாகவே உள்ளனர். அந்நூலை அம்பைக்கும் லதா ராமகிருஷ்ணனுக்கும் அவர் சமர்ப்பித்திருக்கிறார்.படைப்பைத் தாண்டி வாழ்வியல் சூழலுக்குள் சென்று சுகந்திக்கு
உதவியவர்கள் இவ்விருவரும். அதற்காக அவர்கள் கொளரவிக்கப் படவேண்டியவர்கள், புற வாழ்வின் நிர்ப்பந்தத்தைத் தாண்டிப் போய் உதவுகின்ற தீரம் பலருக்கு வாய்க்கப்பெறாதென்பதால்.
இந்த பெண் படைப்பாளிகள் மெளனப்போக்கில் சில சங்கடங்கள் எழுகின்றன.
ஆண் ஆதிக்கம், ஆண் பிரதிகளை நிர்-நிர்மாணம் செய்தல் என்றெல்லாம் விவாதிக்கின்ற பெண்படைப்பாளிகள் பெண் பிரதிகளைப் பற்றிய கருத்தியலை வளர்க்காமல் போவதேன்?
அதுவும் இன்று கவிதைப் பரப்பு சகலத்துறைகளைவிட வீச்சு பெற்றிருக்கின்ற தருணத்தில் இம்மெளனம் தமிழின் பெண் முன்னோடிக் கவிஞருக்கு ஏன் நிகழ்கிறது? ஆயுள் முடிந்த காலத்தில்தான்
படைப்பாளி கெளரவிக்கப் படவேண்டும் என்ற ஊமைத்தனமான எண்ணம்கூட ஒருவித நுண் அரசியலின் வெளிப்பாடே என சுட்டத் தோணுகிறது.
சுகந்தியின் மறைவையொட்டி மாலதி மைத்ரி நடத்திய அஞ்சலி நிகழ்வைக் கடந்து வேறெதும் பேசும்படியாக இல்லாதது வருந்தத்தக்க ஒன்று. பிரகடணங்களைத்தாண்டி செயல்பாட்டினை
எட்டவேண்டிய காட்டாயத்தை சுகந்தியின் இன்மை நமக்கு (குறிப்பாக பெண்படைப்பாளிகளுக்கு) எடுத்துரைக்கிறது.

சரி,சுகந்தியின் கவிதைக்குள் மறுபடி திரும்புவோம்.எஸ்.லச்சுமி பாட்டி,ஆர். லச்சுமி பாட்டிக்குமான நட்பை ஒரு குறும்பட வடிவில் சித்திரப்படுத்துகிறது ஒரு கவிதை(பக்:17).
எஸ்.பாட்டி,ஆர்.பாட்டிக்குமான உறவு குறித்த பரிச்சயம் பற்றிய
சந்தேகத்துடன் ஆரம்பமாகிறது அக்கவிதை. ஆர்.பாட்டி ஒரு விதவை. எஸ்.பாட்டி விவாகரத்தானவள். அப்படியொரு அன்னியோன்யம் இரு பாட்டிக்குள்ளும். ஸ்நேகிதத்தின்
உச்சம் வெளிப்படுகிறது வரிகளில். கல்யாணம்,கருமாதி என்றால் ஜோடி பிரிவதில்லை.ஒப்பாரிப் பாட்டில் வரிக்கு வரி இருவருக்கும் அத்துப்படி. வரி பிசகாமல் பாட்டை பின்
தொடரும் வல்லமை
பெற்றவர்கள் இருவரும். சுகந்தியின் திருமணத்திற்காக வாங்கிய கடன் காசிற்கு வட்டி கேட்கிறாள் எஸ்.பாட்டி. உடனே ஆர்.பாட்டியின் முகம் கருக்க, உறவில் விரிசல் எழுகிறது. பாட்டியும்
பாட்டியும் பிரிந்து போனார்கள். வருஷத்தைக் கடந்துபோனார்கள்.முகத்தை மறந்தே போனார்கள். எஸ்ஸும்,ஆரும் தடையமில்லாமல் போனார்கள்.
பாட்டிகளுக்குள் உறவு முறிந்ததை குறித்து புகார் இல்லை. ஆனால் சுகந்திக்கு முள்ளாய் தைக்கிறது.நட்பின் அறம் சுடுகிறது. நீதி வலுக்கிறது.
ஒரு ஆவணத்தைப் போல இரு மூதாட்டியின் நட்பு யாதார்த்தமாக பதியப் பட்டிருக்கிறது இக்கவிதையில்.
பெண் உறவில் எள்ளல், கயமை, சீக்கு என்று விரியும் கவிதைகள் ஆணுலகத்தின்பால் குரோதம் பொழிகின்றன. அதன் வேரை அறுத்தெரிந்துவிட்டுத் திரிய முற்படுகின்றன.
சுகந்தியின் கவியுலகம் எல்லா நிலையிலும் Binary consept-டினால் உருக்கொள்கிறது.சரிXதப்பு, நல்லதுXகெட்டது,துக்கம்Xமகிழ்ச்சி,நிம்மதிXசலனம்,உயிர்Xஇறப்பு,
அமைதிXஇரைச்சல்,கேள்விXமெளனம்,
வீடுXஉலகம்,பயணம்Xமுடங்கல்,முழுமைXகுறைபாடு,ஆசைXநிராசை,முக்கியத்துவம்Xமுக்கியமற்றது,ஞாபகம்Xமறதி,ஸ்நேகம்Xதுரோகம்,பிறப்புXஅழிப்பு என்று ஊசலாடுகிறது.
நிலையாமையின் முழு ரூபமாக காட்சி கொள்கிறது.

அவரது வாழ்க்கையும் அவ்வாறே என்பதைப் புரிந்துகொள்ளும் போது பதற்றத்தின் பரவல் கவிழ்கிறது. ‘தமிழினி’ வெளியீடாக வந்த சுகந்தியின் ‘மீண்டெழுதலின் ரகசியம்’
தொகுதியை முதலில் வாசித்த போது பெருத்த ஏமாற்றமே எனக்கு மிஞ்சியது. அதில் பெரும்பாலான கவிதைகள் பிசகில் தள்ளாடின. அளவுக்கு அதிகமாக பெண் கவிதைக்கு
சலுகைகள் வழங்கப்படுகிறதோ என்ற ஐயங்கள் மேலெழுந்தன. இப்போது ஒரு மருத்துவரின் பிரயாசையோடு சுகந்தியின் உலகை பொருள்கொள்ள முற்பட்டேன்.
அளவுகடந்த உஷ்ணம் அதில்.சொல்லுக்குச் சொல் பொருள் கூட்டல் நிகழ்கிறது.கசியும் அலரல் வெப்பத்தைப்போல மிதக்கிறது.அந்தச் சூடு ஆண் திமிருக்கு எதிரானது.
அங்கு அலைவுறும் நிலையாமை அவருக்கு மட்டுமே ஆனதல்ல.

‘‘கன்றும் உண்ணாது காலத்தினும் படாது/நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு/எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது/பசலை உணீயர் வேண்டும்/திதலை
அல்குல் என் மாமைக் கவினே” என்று தலைவனுக்காக ஏங்காத முதல் நவீனகாலத்து பெண்பால் புலவர் அற்பாயுலில் உதிர்வது தமிழுக்குப் புதிதல்லவே.

Friday, March 27, 2009

என் கவிதை தொகுதி குறித்து பாவண்ணன்








கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்


அன்றாடச் சுமைகளின் அலுப்புகளையும் கசப்புகளையும் முன்வைக்கும் கவிதைகள் தமிழில் ஏராளமாக உள்ளன. அவற்றை ஒதுக்கி சுமையற்றும் கற்பனையும் களிப்பும் மிகுந்ததாகவும் மனத்தை வசப்படுத்திக்கொள்ளும் வழியொன்றைக் கண்டடைகிற கவிதைகளை இத்தொகுதியில் பகிர்ந்துகொள்கிறார் கடற்கரய். அதனாலேயே இத்தொகுதியைப் படிக்கப்படிக்க உற்சாகமாக உள்ளது. கடற்கரய்யை முக்கியமான இளங்கவிஞராய் அடையாளப்படுத்துபவையாக உள்ளன இந்த முயற்சிகள். அவர் முன்வைக்கிற மாற்றுவழி குழந்தைமையைத் தழுவுவது. குழந்தைமை மென்மையானது. கருணை மிகுந்தது. கள்ளமில்லாதது. ஆனல் மனத்தால் அம்மாற்றுவழியில் வெகுதொலைவு நடக்கமுடிவதில்லை என்பதுதான் துரதிருஷ்டவசமானது. அறிவின் பாரமோ, வாழ்வின் பாரமோ, மீண்டும் அன்றாடங்களின் சக்கரப்பற்களில் கொண்டுவந்து மாட்டிவிடுகிறது. இரு விளிம்புகளிடையே ஓய்வற்று அலைவதாக உள்ளது வாழ்க்கை.


இத்தொகுதியில் 36 கவிதைகள் உள்ளன. இவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தனிக்கவிதைகள் என்ற பிரிவில் 24 கவிதைகளும் குறுங்கவிதைகள் என்னும் பிரிவில் 8 கவிதைகளும் நெடுங்கவிதைகள் என்னும் பிரிவில் 4 கவிதைகளும் அடங்கியுள்ளன. எல்லாக் கவிதைகளையும் ஒருசேரப் படித்துமுடித்தபிறகு குழந்தைமைக்கான கனவு என்பதையே இவரது படைப்பு மையமாக எடுத்துக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. குழந்தைமை என்பது ஒருவித கட்டற்ற சுதந்தரம். அறிவின் சுமை ஏதுமற்ற வெளி. கருணை. சிரிப்பு. சுகம். ஆனந்தம். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். கடற்கரய் விரும்புவது இவை மட்டுமல்ல. இவற்றையும் உள்ளடக்கிய இன்னும் பெரிய அழகான உலகம்.


தனிக்கவிதைப் பிரிவில் முக்கியமான கவிதை 'குதிரை சவாரி '. குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியமான ஒரு கற்பனை இதில் நுட்பமாக கையாளப்பட்டுள்ளது. ஒரு புத்தக அட்டையில் காணப்படும் குதிரையின் சித்திரத்துடன் இக்கவிதை தொடங்குகிறது. சித்திரத்தில் சவாரி செய்துசெய்து பழக்கத்தால் சலித்துப்போய் தரையில் இறங்குகிறது அக்குதிரை. அதை வசப்படுத்துபவன் மனிதன். அவனுடைய இதமான வார்த்தைகளும் நீவுதல்களும் குதிரைக்குச் சுகமான அனுபவமாக உள்ளது. அவன் தீண்டுதலிலும் நீவுதல்களிலும் அக்குதிரையைத் தனக்கு இணக்கமாக மாற்றிக்கொள்ளும் முயற்சி ஒளிந்திருப்பதைத் தாமதமாக அறிகிறது குதிரை. பழக்கத்தின் சலிப்பை தாங்கவியலாமல் சுதந்தரத்தை நாடி தரைக்கு வந்த முயற்சி இன்னொரு பழக்கத்தின் சொடுக்கல்களுக்குள் தள்ளும் ஆபத்தைத் தேடித் தருவதை துக்கமுடன் உணர்ந்து இறங்கிவந்த இடத்துக்கே மறுபடியும் சென்று சேர்கிறது. அப்படியென்றால் சுதந்தரம் ? புதுமையில் இளகிக் கரையும் மனத்தில் அந்த எண்ணம் சற்றே அடங்கிப் போகிறது. மீண்டும் ஏதோ ஒரு முறை அதன் மனம் சலிப்பை உணரக்கூடும். அப்போது அது மீண்டும் இறங்கி வரலாம். அன்பால் வருடிக்கொடுக்கும் மனிதன் யாரேனும் அப்போதும் எங்காவது எதிர்ப்படக்கூடும். அவன் தீண்டுதலிலும் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரமும் வசப்படுத்தி நுகரும் நோக்கமும் புலப்படக்கூடும். மறுபடியும் ஒரு பெருமூச்சோடு அது பழைய இடத்துக்கே செல்லக்கூடும். அப்படியென்றால் அதன் சுதந்தரம் ? இது இக்கவிதையை அசைபோட அசைபோட நமக்கு எழும் எண்ணம். இதைத் தொடர்ந்து எங்கெங்கும் வசப்படுத்தும் தந்திரங்களும் நோக்கங்களும் நிறைந்த ஊரில் படத்திலிருந்து தரைக்கும் தரையிலிருந்து படத்துக்கும் இடையேயான பயணத்துக்கு முடிவே இருக்கப்போவதில்லை என்ற எண்ணமும் எழுகிறது. அப்போது நாமே ஒரு கேள்வியை உருவாக்கிக்கொள்கிறோம். அடிப்படையில் சுதந்தரம் என்பதுதான் என்ன ? கவித்துவம் மிளிரும் இக்கேள்வியின் முன் நாம் எந்தப் பதிலை வைக்கமுடியும் ? அதே நேரத்தில் ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கும் அந்த இன்னொரு புள்ளியிலிருந்து மற்றோர் புள்ளிக்கும் அல்லது பழைய புள்ளிக்குமிடையே மாறிமாறி நிகழ்த்தும் பயணங்களுக்கும் தாவல்களுக்கும் அளவே இல்லை. இடையறாது ஒலிக்கும் குளம்புகளின் ஓசை அதையே உணர்த்துகிறது. ஒருபோதும் சுதந்தரத்தை வரையறுக்க முடிவதில்லை. இதுவாக இருக்குமா அதுவாக இருக்குமா என்று அந்தந்த சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவிதமாக தற்காலிகமான பொருளாக மட்டுமே வரையறுக்கமுடிகிறது. வரையறுத்துக் கொள்ள முடியாத துயரத்துக்கும் வரையறுத்துப் பார்க்கும் ஆர்வத்துக்கும் இடையே ஊடாடுகிறது மானுடனின் வாழ்க்கைப் பயணம். அதைச் சுட்டிக்காட்டும் ஒரு புள்ளியாக இருக்கிறது குதிரைச்சவாரி. தரையிலிருந்து சித்திரத்துக்குள் சென்றுசேரும் மனிதனின் ஆவலைக் குறிப்பிடும் 'தைலவண்ண மனிதன் ' கவிதையில் வெளிப்படுவதும் இத்தகு பயணத்தின் இன்னொரு கிளைப்பாதையே.


சுதந்தர உலகுக்கான விழைவை வெளிப்படுத்தும் இன்னொரு கவிதை 'வெட்டுக்கிளி மதுக்குவளை '. ஒரு கோப்பையளவு மதுநீரைக் கொண்டு தன் ஆகாயத்தை உருவாக்கிக்கொள்ள விரும்பும் மனிதன் இக்கவிதையில் வெளிப்படுகிறான். அவன் ஏற் கனவே நின்றுகொண்டிருப்பதும் உலவிக்கொண்டிருப்பதும் இன்னொரு ஆகாயத்தின் கீழேதான். ஆனால் அந்த ஆகாயத்தை அவன் மனம் தன்னுடையதென முழு ஈடுபாட்டோடு தழுவிக்கொள்வதில் ஏதோ தடையிருக்கிறது. அவனுடைய எதிர்பார்ப்புகள் சிலவற்றை அந்த ஆகாயம் முழுமைப்படுத்தவில்லை. ஏதோ கசப்பு. ஏதோ துயரம். இனம்புரியாத வலி. அல்லது சொல்லமுடியாத அலுப்பு. யாரோ உருவாக்கிய ஆகாயத்தின் கீழே தன்னை நினைத்துக்கொள்ளமுடியாது என்ற எண்ணம் எழுந்துவிடுகிறது. ஆகையால் தனக்கே தனக்கென்ற ஓர் ஆகாயத்தை உருவாக்கிக்கொள்ள உத்வேகம் கொள்கிறான். தனக்கு மட்டுமேயான ஓர் ஆகாயத்தை உருவாக்கி, தான் மட்டுமே அங்கு உலவி , ஆனந்தம் கொள்ளும்போதுதான் தன் ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் விழைவு நிறைவேறும் என்று அவன் ஆழமாக நம்புகிறான். அதன் செயல்பாடுதான் அவன் மதுககோப்பையில் ஆகாயத்தை உருவாக்குகிறான். அந்த ஆகாயம் அவனுக்குச் சிறகுகளைக் கொடுக்கிறது. எங்கோ துாக்கிச் செல்கிறது. அதில் ஒரு துண்டாக ஆனந்தத்துடன் மிதக்கிறான் அவன்.

கோப்பை காலியானதும் ஆகாயமும் மறைந்துபோகும் என்ற உண்மை தெரியாதவனல்ல மானுடன். ஆனாலும் தன்னால் உருவாக்கமுடிகிற ஆகாயத்தில் சிறிது காலமேனும் சுகமாகத் திரிந்த நிறைவை அடைவதில் இடையறாத ஏக்கமுள்ளவனாக இருக்கிறான். சொந்த ஆகாயத்தில் பெறமுடியாத சுகத்தையும் நிம்மதியையும் புனைவு ஆகாயத்தில் பெற்றுக் களிக்கும் விழைவை சுதந்தரத்துக்கான உள்ளார்ந்த நாட்டமென்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது ? எதார்த்தம் அலுத்துப் போவது மானுடனுக்கு மட்டுமல்ல, பறந்து திரிகிற வெட்டுக்கிளிகளுக்கும் அலுப்புண்டு போலும். அதுவும் அந்தக் கோப்பைக்குள் விழும்போது அந்த எண்ணம் எழுவதைத் தடுக்கமுடியவில்லை. உயிர்கள் அனைத்துக்குமே இந்த ஆகாயம் அலுப்பைத் தருவதும் புனைவு ஆகாயம் சுகம் தருவதும் விசித்திர முரணாக இருக்கிறது. வாழ்க்கையே புரிந்துகொள்ளமுடியாத புதிராக எஞ்சுகிறது.

நகரத்தை மிருதுவாக வைத்திருக்கும் காகத்தின் கருணையைப் பறைசாற்றும் 'வெயில்காகம் ' கவிதையும் பறவையின் உயிரைக் காக்கப் பதறும் குழந்தையின் கருணையை முன்வைக்கும் 'பறவைகள் அழகை கவிதையில் ரசிப்பவன் ' கவிதையும் உணர்ச்சிமோதல்கள் மிகுந்த கவித்துவத் தருணத்தை முன்வைக்கின்றன. அவை கொடுக்கும் அனுபவம் என்றென்றும் அசைபோட்டு மகிழத்தக்கவை.


குறுங்கவிதை பகுதியில் முக்கியமான ஒரு கவிதை 'விண்மீன் '. கவிதையில் வாழ்ந்து சலித்த ஒரு விண்மீன் விழுகிறது. கைப்பற்றி எடுக்கிறான் ஒரு சிறுவன். அவனுக்கு அது ஒரு பெரும் சாகச உணர்வைக் கொடுக்கிறது. பெறமுடியாத ஒன்றைப் பெற்றுவிட்டதைப்போல மனம் விம்முகிறது. கண்டெடுத்துப் பராமரித்துக் காக்கும் பெருமிதம் கண்களில் வழிகிறது. இதனாலேயே அவன் முகத்தில் தேவதையைப்போன்ற மலர்ச்சி படர்கிறது. எல்லாமே சிறிது காலம்தான். விண்மீனைச் சுமப்பதோ அல்லது காத்துக்கொண்டிருப்பதோ அவனால் எப்போதும் செய்யமுடிகிற காரியமாக இருப்பதில்லை. அலுப்பும் சலிப்புமான காரியமாகக்கூட பட்டிருக்கக்கூடும். கைநோகத் துாக்கி எறிந்துவிட்டு சுதந்தரமாக கைவீசிப் போகிறான். விழுந்த இடத்தில் விண்மீன் இல்லை. இக்குறிப்போடு கவிதை முடியும்போது வாசக மனம் எங்கே போயிருக்கக்கூடும் அந்த விண்மீன் என்ற கேள்வியோடு துள்ளியெழுகிறது. எடுத்தது உண்மை. வைத்திருந்ததும் உண்மை. வீசியெறிந்ததும் உண்மை. போன இடம் எது என்பது மட்டுமே புதிராக எப்படி இருக்கமுடியும். கேள்விகளைப் பின்பற்றிச் சென்றபடி இருக்கும் தருணத்தில் தற்செயலாக அந்தப் புதிரின் முடிச்சு அவிழ்கிறது. அதை எடுத்துக்கொண்டது இன்னொரு சிறுவன் அல்லது சிறுமியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர்களும் சிறிதுகாலம் வசப்படுத்தி வைத்திருந்து மகிழ்ந்து, பிறகு சலிப்பு உருவானதும் கைநோக மீண்டும் வீசியெறியலாம். வீசி எறிதலுக்கு கணக்கே இல்லை. மாறும் கைகளுக்கும் அளவே இல்லை. விண்மீன்கள் உருண்டுகொண்டே இருக்கின்றன. கவிதை மெல்லமெல்ல தன்னைத் தானே விரிவாக்கியபடி இருக்கிறது. வாசிக்கவும் நல்ல அனுபவமாக உள்ளது. யார் அல்லது எது அந்த விண்மீன் ? சலிப்பு உருவாவது எதனால் ? இக்கேள்விகளுடன் பயணம் செய்யும்போது வாசகர்களால் மேலும் பல வாசல்களைக் கண்டடையமுடியும்.


நெடுங்கவிதைப் பிரிவில் தீட்டியிருக்கும் 'குழந்தைச் சித்திரம் ' உயிர்த்துடிப்புடன் உள்ளது. பெரியவர்களின் பகுத்தறிவும் மேதைமையும் கூடிய மனத்தையும் தெய்வத்தன்மையும் புனைவுகளும் நிறைந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் மலர்போன்ற மென்மையையும் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றிமாற்றிக் காட்டிக்கொண்டே செல்கிறது கவிதை. ஒரு சிறிய கோடு கிழித்து அதை வானம் என்று நம்பும் குழந்தை. குழந்தை என்றும் பாராமல் தர்க்கரீதியாக அதற்கு உண்மையைப் புகட்டும் ஆவேசத்தில் அது வானமே இல்லை என்று வலியுறுத்த முயற்சிசெய்கிறார்கள் பெரியவர்கள். அச்சத்தில் அவர்களைக் குழந்தைகளின் அருகில் நெருங்கவேண்டாம் என்று யாசிக்கிறது கவிதை வரி. ஆனாலும் உலகம் அப்படி எந்த வரிக்கும் கட்டுப்பட்டு இருப்பதில்லை. பெரியவர்கள் குழந்தைகளின் உலகில் உரிமையோடு சகஜமாக பிரவேசிக்கிறார்கள். குளிர்ந்த நீரை மறுக்கிறார்கள். இனிய காற்றைத் தடை செய்கிறார்கள். மழையின் சாரலுக்கு ஏங்கி நிற்பதைத் தடுக்கிறார்கள். கைநீட்டிக்கூட மழைநீரை உள்ளங்கைகளில் ஏந்திக்கொள்ளத் தடைவிதிக்கிறார்கள். சதாகாலமும் மரவட்டைபோல சுருண்டு கிடக்க வைக்கிறார்கள். காகிதக்கப்பல்களை அவர்களால் தண்ணீரில் விடமுடிவதில்லை. கண்ணீரில் மட்டுமே மிதக்கவிட வேண்டியிருக்கிறது. எல்லாப் பாடங்களையும் கச்சிதமாக ஏற்றிஏற்றி குழந்தைகளை மெல்லமெல்ல பெரியவர்களாக மாற்றுகிறார்கள் பெரியவர்கள். பெரியவர்களானதும் குழந்தைகள் தலைநிறைய சட்டங்களோடும் விதிகளோடும் அலைகிறார்கள். பிறகு, அடுத்த தலைமுறைக் குழந்தைகள் அருகில் செல்கிறார்கள். எதற்காக ? பெரியவர்கள் என்னும் தகுதிக்குப் பொருத்தமானவர்களாக அவர்களை மாற்றுவதற்கு. என்ன சோகம் பாருங்கள். ரசனைக்கும் ஆனந்தத்துக்கும் மென்மைக்கும் இடமின்றி தொடர்ந்து பெரியவர்களாலேயே உலகம் நிரம்பிக்கொண்டே போகுமென்றால் குழந்தைமைக்கு எந்த இடம் மிஞ்சும் ? குருவிக்காக கலங்கி கருணைகொள்ளும் குழந்தைமை இல்லாத உலகை எண் ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.


'வீடு ' என்னும் நெடுங்கவிதையில் நகுலனின் சாயலில் தற்செயலாக வந்துவிழுந்துள்ள 'யாருமில்லாத வீட்டில் யார் யாரோ இருக்கிறார்கள் ' என்னும் வரிகள் பல திசைகளில் எண்ணங்களை எழுப்பவல்லவை. மீன் வியாபாரிகள் கவிதையில் இடம்பெறும் 'மீனும் நீந்தியது நிலவும் நீந்தியது ஒரே இடத்தில் ' என்னும் வரியும் இத்தகையதே.

( விண்மீன் விழுந்த இடம்- கவிதைத்தொகுதி. கடற்கரய், காவ்யா வெளியீடு, 14, முதல் குறுக்குத்தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை-24, விலை. ரூ40)

Wednesday, March 25, 2009

இனிமையான ஒரு பகிர்வு

கவிஞரும் விமர்சனவாதியுமான ராஜமார்த்தாண்டன் அவர்களின் மகன்
ரா.கிருஷ்ண பிரதீப் எம்.ஏ., எம்.ஃப்பில்.,அவருக்கும், விஜயநகரி
அமரர் இ.சிவசுப்பிரமணியன் திருமதி சி.சரோஜா இவர்களின் மகள் சி.அகிலா,எம்.எஸ்ஸி., அவர்களுக்கும் வருகின்ற 05.04.09 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30-10:30 மணியளவில் என்.என்.சி.ஆர்.திருமண மண்டபம், கொட்டாரம்(நாகர்கோவில்)திருமணம் நடக்கவுள்ளது. படைப்பாளிகள் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவும்.மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தவும்
தொடர்புக்கு: அ.ராஜமார்த்தாண்டன், இடையன்விளை, சந்தையடி பேச:04652- 258817

Monday, March 23, 2009

நவீன கவிதையின் ஆகிருதி

கடந்த வாரம் நம்மைவிட்டுப் பிரிந்த கவிஞர்அப்பாஸ் அவர்களுக்கு எனது அஞ்சலி.வெகுவிரைவில் அவரின் கவிதைகள் குறித்து எழுதுகிறேன்.