Wednesday, February 11, 2009

செயல்நோக்கம் இல்லாத ஒரு செயல்நோக்கத் தன்மை






பொதுவாகக் கவிதைகள் குறித்துப் பேசுவதைவிட கவிதைகள் குறித்து எழுதுவது பல சமயங்களில் அபத்தமாகவே முடிகிறது. அதனாலேயேகவிதை இயல் பற்றிய கறாரான கருத்துள்ளவர்கள் பெரும்பாலும் கவிதைகள் குறித்து எழுதுவதைத் திட்டமிட்டே தள்ளிப் போடுகிறார்கள் அல்லதுதவிர்க்கிறார்கள். நானும் இதற்கு விதிவிலக்கு அல்ல; இதற்கு இன்னொரு பார்வையில் பதில் தேடினால் கவிதையின் இடம் என நாம் தீர்மானிக்கும் இடம்பருவத்திற்குத் தப்ப, தொடர்ந்து நகர்ந்து கொண்டே அல்லது மாறிக்கொண்டே இருப்பதுதான் என்பது புலனாகும். ஆக, கவிதைக்கு ஒற்றை இருப்பிடம் என்பது சாத்தியமில்லை.அதற்காகக் பல இடங்களில் திக்கற்றுத் திரிவதெல்லாமும் கவிதையாகிவிடாது.கவிதைக்குத் திக்கு இருந்தாக வேண்டும்.திக்குதான் தீரம்.
ஒரு கோணத்தில் உண்மையைப் போலவும் பலவிதத்தில் பொய்யைப்போலவும் இருப்பதைக் கவிதை என்கிறோம். கவிதையில் உண்மைக்கு நிகர் பொய், சரிநிகர் சமானம். வெறும் உண்மைகளைக் கொண்டு புனையப்படுவது கவிதை அல்ல; தகவல் அறிக்கை.அதனால்தான்”ஒரு எழுத்தாளனின் எழுதுகின்ற வேலையானது வெறும் தகவல் தெரிவிக்கும்காரியம் அல்ல”என்றார் பார்த்.தகவலுக்குள் உண்மை இருக்க வாய்ப்புள்ளதே ஒழிய, தகவல் முழுக்க உண்மையைக் கொண்டதல்ல;உண்மையான,தகவலான விஷயங்கள் அதில் இருக்கலாம்நிச்சயம் கவிதை அம்சம் இராது.கவிதைக்குக் குட்டிக் குட்டிப் பொய்கள் அவசியம். கவிதைக்குள் பொய், ஆணென்றால் உண்மையோ, பெண். எனவே கவிதையில் ஈருடல் வேண்டும்.இது புற கருத்தியலுக்குப் பொருந்தாது.
நவீன கவிதையில் பெண் என்பவள் புற அளவில் அரசியல் காரணியங்களுக்காக வேறாகிறாள். ”பெண் வாசகர் என்ற கருதுகோள் ஒரு பிரதியின் பாலியல் சங்கேதங்களுடைய தனிச்சிறப்பின் மீது நம்முடைய கவனத்தை ஈர்ப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரதியைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளலை அது எவ்வாறு மாற்றுகிறது” என்பதைப் பற்றிஎலைன் ஷோவால்ட்டர் (ELAINE SHOWALTAR) நிறையவே விவாதிக்கிறார்.இதைத்தான் பெண்ணிய வாசிப்பில் என்கிறார்கள்.நடப்பிலுள்ள பொய்யானது கவிதைக்குள் அழகியலாக மாற்றமடைகிறது.காண்ட் உள்ளிட்ட பிற கோட்பாட்டாளர்களின் கருத்தின்படி ”அழகியல் பொருட்களுக்கு, செயல் நோக்கம் இல்லாதஒரு செயல்நோக்கத்தன்மை இருக்கிறது.”
”இலக்கியத்தை வித்தியாசமான முறையில் வாசகர்கள் கவனித்துப் பார்ப்பதற்குக் காரணம், அதனுடைய கூற்றுகள் உலகத்தோடு ஒரு தனிச்சிறப்பானஉறவைக் கொண்டுள்ளன என்பதுதான்.இந்த உறவை நாம் புனைவு ரீதியானது என்று அழைக்கிறோம். ஆக, அகம் புறம் என்பது ஆண் - பெண் போல. தமிழ்க்கவிதை மரபு அகத்திற்கு தரும் முக்கியத்துவத்தைப் புறத்திற்கும் வழங்கியே உள்ளது.இன்று நாம் எவ்வளவுதான் மரபை மீறியதாக நம்பினாலும் அவற்றின் கண்ணிகளை உடைத்து வெறுமனேவெளியேறிவிடுவதென்பது முடியாததாகிறது.மரபை குறித்து மீள் வாசிப்புகள் நடக்கும் தற்காலத்தில் இதைப் பற்றிய புரிதலின் தேவை மேலும் கூடுதலாகிறது நமக்கு.
கவிதையை இன்றைக்குள்ள பின் நவீனத்து கருத்தியல் நிராகரிக்கிறது.’’கவிதை என்பது குறியீடுகளாலும், ஏகப்பட்ட அர்த்தங்களின் சுமையாலும் ஆனது.மரபார்ந்த கவிதைகள் வித்தியாசமான மொழிப் பிரயோகத்தால் ஆனவை என்றால் நவீன கவிதையோ மொழியை வன்முறையாக்கிக் கொண்டு இயங்குகிறது” என்கிறார் ரொலாண்ட் பார்த். அப்படியென்றால் நாம் கவிதையை ஓரங்கட்டிவிடலாமா?முடியாது.ஒருவேளை அக்கருத்து மேற்கில் பொருந்தலாம்.கவிதை நடையே உரைநடையாக புழங்கிய நம் குடிக்கு நிச்சயம் பொருந்தாது.இங்குதான் நாம் கிழக்கில் சாய்கிறோம்.உதவிக்கு எட்வர்த் சயீத் நிற்கிறார்.
ஒருவிதத்தில் மீண்டும் மீண்டும் புதிய கவிதைகள் பிறந்துகொண்டே இருந்தான் பழைய கவிதையின் இருப்பு சாத்தியமாகிறது.ஒரு வகையில் புதிய கவிதையை வாசிப்பதென்பது அதைப் பழைய, சமகாலக் கவிதையோடு தொடர்புபடுத்துவதாகும். அதனால் ஒரு தளத்தில் ஒரு கவிதை வாசிப்பதென்பது அது ஒட்டுமொத்த கவிதையை வாசிப்பதாகிறது.ஒரு கவிதையைவாசிப்பதன் மூலம் எப்படி ஒட்டுமொத்த கவிதையை அது வாசித்ததாகிறதோ அதைப் போலதான் பல கவிதைகளை வாசிப்பதென்பது ஒரு புதிய கவிதையைப் படைப்பதாகிறது.பழையதன்நகல்தான் புதியது.பழையதன் பரிச்சயம்தான் புதியதற்கான முன்நகர்வாகிறது.ஆகவே, ஒரு புதிய படைப்பாளிக்குக் கவிதை எழுதுவதற்கு ஆழ்மன ரீதியாகக் கவிதை இயல் பற்றிய ஞானம் எவ்வளவு முக்கிமானதோ அதைப்போலவே அதன் வரலாறும் அவசியமானது. அப்போதுதான் அவனால் புதிய யுத்திகளை நோக்கியும், கவிதையை புதிய வெளிக்குள் நின்றும் பேச முடியும்.
நவீன கவிதையைப் பற்றி அடிக்கடி வைக்கப்படும் வாதம்,புரியாமை. இருண்மை. புரியாமையின் முதற்காரணம் கவிதையல்ல;அவதானிப்பு.அதுவும் நெடிய அவதானிப்பு.சில சமயம் நெடிய அவதானிப்புகூட புரிதலுக்கு உதவாமல் போகலாம்.அப்பட்டமான அர்த்தங்களைக் கவிதைக்குள் தேடுபவர்கள் ஏறக்குறைய கவிதையின் எதிரிகள்(அர்த்தம் என்பதை உரைவடிவில் விளக்கப்படும் நேரடித் தன்மையென கொள்ளவும்).”அர்த்தம் என்பது சார்புநிலை கொண்டது.எதையும் சார்ந்திராத சுயம்புவான அர்த்தம் என்று எதுவும் கிடையாது. அர்த்தம் என்பதுபொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மொழி என்கிற அமைப்பின் உற்பத்தியே. அர்த்தங்களை உருவாக்கும் இந்த மொழி என்கிற அமைப்பு அடிப்படையில் அர்த்தங்கள் ஏதும் இல்லாததே”என்பதே அர்த்தம் பற்றிய ரொலாண்ட் பார்த்தின் விளக்கம்.
என் புரிதலில் கவிதையின் அர்த்தம் அகராதிக்கு வெளியில் கிடக்கிறது.அகராதியில் பொருள் தேடுபவர்கள் ஒரு நாளும் கவிதையை உணரமுடியாதவர்கள்.அகராதியின் அந்தப் பக்கம்என்பது அனுபவத்தின் பக்கம். அனுபவம் என்பது வாழ்வியலின் பொருள்.பொருள் என்பது இயற்கையின் கச்சா.கச்சா என்பது கவிதையின் ஆன்மா.ஆன்மா என்பது அத்துவானத்தின் வெளி. வெளி என்பது பிரபஞ்சத்தின் நிறம். நிறம் என்பது ஊடுறுவும் ஒளி. ஒளி என்பது நிதர்சனத்தின் காட்சி.காட்சி என்பது நடப்பியலின் கலை.கலை என்பது செயல்பாட்டின் வடிவம்.வடிவம் என்பது கற்றலின் பிரதிபலிப்பு. பிரதிபலிப்பு எனபது மொழியின் வெளிப்பாடு.வெளிப்பாடு என்பது சாரம்சத்தின் உணர்தல். .உணர்தல் என்பது மனதின் அமைதி.அமைதி என்பது ஆழ்கடலின்தியானம்.தியானம் என்பது ஆன்மிகத்தின் தரிசனம். தரிசனம் என்பது கடவுளின் இன்மை. இன்மை என்பது சுவடற்ற கரைதல்.கரைதல் என்பது மென்மையின் ஒலி. ஒலி என்பது நிலத்தின்நீர் . நீர் என்பது ஆகாயத்தின் நிர்மூலம். நிர்மூலம் என்பது அனுபூதியின் காற்று. காற்று என்பது உடம்பின் உயிர்.உயிர் என்பது ஞானத்தின் சக்தி.சக்தி என்பது நெருப்பின் வலிமை.வலிமைஎன்பது ஆரோக்கியத்தின் கிரியா.கிரியா என்பது படைத்தலின் லயிப்பு. லயிப்பு என்பது உற்பத்தியின் உறவு. உறவு என்பது இனத்தின் காதல்.காதல் என்பது தத்துவத்தின் அறம்.அறம் என்பதுதேவியின் கவிதை. கவிதை என்பது இன்பத்தின் அனுபவம்.
தாய்த் தமிழ்த்கவிதைப் பற்றிய வாசிப்பு பரிச்சயம் தமிழியல் மாணவனான கிருஷ்ண மூர்த்திக்கு கல்விப்புலமாகவே வாய்த்திருக்கிறது.அது அவருக்கு பேரான விஷயம். பேரானதை அவர்எப்படி கையாளப்போகிறார் என்பதில்தான் ரகசியம் பொதிந்துள்ளது.கவிதையின் ரகசியமாக அது உருமாற்றமடைய வேண்டும்.அவரது தமிழ் அடிப்படைஇலக்கண அறிவு கவிதையின்கருத்தியல் புலமைக்கு உதவலாம். நேரடியாக அது இன்றைய கவிதைக்குள் வந்தால் ஒவ்வாமையாகிவிடும்.காலத்தின் ஒவ்வாமை.அதை மீறி கவிதையை அவர் கொண்டு செல்ல வேண்டும்.அதற்குத் தமிழ் இலக்கிய கல்வியைப் போல கல்விப்புலத்திற்கு வெளியில் ஓர் இலக்கிய கல்விப் புலம் இருப்பதை கண்டு அதில் கிருஷ்ண மூர்த்தி அடிப்படை பயில வேண்டும். இது ஏறக்குறைய ஒரு மாற்றுக் கல்வி மாதிரி. அப்படியான தெளிவு உண்டாகும் நாளில் அவரால் கவிதையின் மெய்மையை எட்டிவிட முடியும். அந்த வெளிச்சத்தைத் தொடஇருட்டில் நிற்க வேண்டும். அந்த இருட்டுலகின் வருத்தலுக்கு கிருஷ்ண மூர்த்தி தயாராகிவிட்டார் என்பதே மகிழ்ச்சி.இனி இருட்டையும் வெளிச்சத்தையும் மாற்றி மாற்றி அடுக்குவதில் அவருக்கு சாமர்த்தியம் கைவர வேண்டும், அவ்வளவுதான்.
இன்றைய பொருள் ஈட்டும் உலகில் கவிதையின்பால் மூர்த்திக்கு ஆவல் பிறந்திருப்பதே நம்மை இன்பமிக்கச் செய்கிறது.பல நாள் சந்திப்பில் கூட மூர்த்தி தான் ஒரு கவிஞன் என்பதைஎன்னிடம் காட்டிக்கொண்டதேயில்லை.திடீரென்று கொண்டுவந்து நீட்டினார்.மறுக்காமல் பெற்றேன்.காரணம்,மூர்த்தியின் எளிமை எனக்குப் பிடிக்கும்.நல்ல மாணவன் பட்டியலில் நிற்பவர் அவர்.அதற்காக எனக்கு இவரை அறிமுகப்படுத்திய அடையாளம் சாதிக்கிற்கு நன்றி.வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான இவரின் கவிதையின் நிறைகுறை குறித்து அதிகம் நான் அலசிஆராயவில்லை.ஆனால் முழுக்க வாசித்தேன். அதைப் பற்றிய எனது கருத்துகளை வாசகர்களாகிய உங்களைப் போலவே என்னோடு வைத்துக் கொள்கிறேன்,அது இங்கே இடையூறாக இருக்கும் என்பதால்.இதுவும் ஒரு நாசுக்குதான். கவிதை எழுதுவது யாருடைய நல்கையையும் பெறவேண்டியல்ல;அது ஒரு நோக்கில் சமூகப் பொறுப்புணர்வின் சுமை.சுமையைத் தலையில் தூக்கிக் கொண்டு திரிவது இன்பமுறும் காரியமா?ஆகவேதான் மற்ற எல்லோரைக்காட்டிலும் ஒரு சமுகத்திற்கு கவிஞன் என்பவன் முதன்மையானவனாகிறான்.ஒரு மொழியை அடுத்த சந்ததிக்கு சுமந்து செல்லும்,புதுப்பிக்கும் பொறுப்பு அவனிடம்தான் இருக்கிறது.மொத்தத்தில் மொழியின் கிடங்குஅவன்.இப்பெருமைக்குரிய பணியை ஏற்கும் கிருஷ்ண மூர்த்திக்கு என் வளமான வாழ்த்துகள்.
- கடற்கரய் சென்னை-15 14.12.2008

No comments: